August 22, 2015

தகடூர் நாட்டின் பழக்க வழக்கங்கள்

தமிழரின் பொங்கல் நாளான உழவரின் திருநாளான பொங்கல் பண்டிகையை வேளாண் குடிகள் மிகவும் சிறப்பாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கொண்டடி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை உழவுக்கு கால்நடைகளை பயன்படுத்தும் விவசாய குடிகளுக்கேயுரிய பண்டிகையாகும். தைத்திங்களில் முதல் நாள் காப்பு கட்டும் நாளாக பூலாப்பூவு, வேப்பிலை, பண்ணை இலை மற்றும் மா இலை கலந்து கொத்து கொத்தாக வீட்டின் இறவானத்தில் செருகுவார். பின் மாட்டுக் கொட்டகைகளிலும் பில்(புல்) போர்களிலும் ஆடு மாடு கட்டும் பட்டிகளிலும் செருகுவர். வீடுகளுக்கு வெள்ளை அடித்து நன்றாக சுத்தம் செய்வார்கள். ஒட்டு தமிழர்களுக்கு இந்த பழக்கவழக்கங்கள் இருந்தாலும் தகடூர் நாட்டின் குடிகளுக்கு முக்கியமானதாகும்.



அம்சேரி:-

தகடூர் நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகமான கவுண்டர்கள் (வன்னிய குல க்ஷத்ரியர்) இந்த நன்னாளில் பங்காளிகள் அனைவரும் ஒன்று கூடி பங்காளிகள் விழாவாக "அம்சேரி" செய்வார்கள். இதனை சிலர் நான்காம் நாள் கரிநாளிலும் செய்வார்கள். உரிமை உடையவர்கள் கூட்டுறவாக இருந்தால் தான் ஊர்காக்க முடியும், நாடு காக்கமுடியும் என்பதாலும் ஆண்டுக்கொருமுறை ஒருவரை ஒருவர் சந்தித்து ஓர் ரத்தத்தில் வந்தவர்கள் பாசம் காட்டி அளவளாவிக் கொள்ளும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

அம்சேரி விழாவில் பங்காளிகள் அம்மனுக்கு ஆடு வெட்டுதல்

அம்சேரி விழாவில் அம்மனுக்கு பூசை செய்தல். 

பொருள்:


அம் - அழகு , நலன்
சேரி- ஊர்

ஊரின் நலனுக்கு பங்காளிகளிடையே ஒற்றுமை வலியுறுத்துவதே இவ் விழாவின் நோக்கமாகும். ஓர் புனிதமான இடத்தை தேர்வு செய்து பொங்கல் வைத்து ஆட்டை பலி கொடுத்து பூசை செய்வதே அம்சேரியாகும்.

இரண்டாம் நாள் கதிரானை போற்றும் நாள். பூமியில் தழைக்கும் ஓர் உயிர்க்கெல்லாம் துணைக்கரம் தந்து உயிராய் விளங்கும் அண்டப் பேரொளியாய் விளங்கும் கதிரவனை தமிழர்கள் தொன்று தொட்டு போற்றி வணங்கி வருகிறார்கள். கதிரவனை வடமொழியாளர்கள் சங்கரன் என்கிறார்கள். நாம் பெரும் பொங்கல் என்பதை வடமொழியாளர்கள் "சங்கராந்தி" என்றும்

பெரும்பொங்கல் அன்று மாலை நிலத்தை அகழ்ந்து அடுப்பிட்டு பெரும்பானை புதுச்சட்டிகளை வைத்து அதிலே பாலிட்டு, நீரிட்டு, புத்தரசியிட்டு பொங்கச் செய்து, புதுப்பானையில் பொங்கல் பொங்கிவர மகிழ் வெய்தி, பின் கதிரவனுக்கு பூசணிஇலையிலும் வாழை இலையிலும் படையலிட்டு கதிரவனை போற்றி வணங்குவார்கள். பின் படையலில் உள்ள சோற்றில் வெல்லம், தயிர், பூசணி குழம்பு இட்டு நன்றாக பிசைந்து கையில் எடுத்து உருண்டை உருண்டையாக தன் தாய் தந்தையாருக்கு - மனையாள் மக்களுக்கு உற்ற சகோதரர் சகோதரிகளுக்கு ஊர் உறவினர்களுக்கு கையில் கொடுத்து அங்கேயே உண்பிக்க செய்து பேரின்பமடைவார்கள்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், மாடு இல்லையென்றால் மனிதன் இல்லை என்பது நம் தமிழர் மொழி, மாடு என்பதற்கு செல்வம் என்பது பொருளாகும். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை நீர் நிலைகளுக்கு ஓட்டிச் சென்று உடலெல்லாம் நீரிட்டு நன்றாக தெய்த்து குளிப்பாட்டி இருப்பிடம் கொண்டு வந்து அதன் கொம்புகளை நன்றாக மழ மழவென சீவி தூய்மைப்படுத்தி வண்ணங்களை தீட்டி அழகிய பித்தளை குப்பிகளை மாட்டி ஓசை கிளம்பும் மணிகளை அதில் இணைத்து வண்ண வண்ண குஞ்சங்களை கட்டிவிடுவார்கள். மாடுகளை கழுத்தில் வேப்பிலை மாலைகளை கட்டி விடுவார்கள். புதிய மூக்கணாங் கயிறு போட்டு நல்ல வலுவான கயிறுகள் கொண்டு பிணைப்பார்கள். நிலத்தை அகழ்ந்து அடுப்பிட்டு புதுப்பானை புத்தரிசி பொங்கலிட்டு மாலை நேரம் வந்தவுடன் மாடுகளை களத்தினிலே வரிசையாக நிற்க வைத்துவிட்டு அருகம்புல் செருகிய சாணியால் செய்யப்பட சாமி உருவத்தின் முன் சாணியால் வடிவமைக்கப்பட்ட சாணிக் குளத்தில் மாட்டுக் கோமியம் இட்டு நிரப்புவார்கள். பிறகு பூசை நடக்கும். பொங்கல் படையலிட்டு ஊதுபத்தி கொளுத்தி தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்திவிட்டு சாம்பிராணியை மாடுகளுக்கு காட்டி "பொங்கலோ பொங்கல்" என்று இன்னிசை முழங்கி சிறிது சோறை நிலத்தில் இடுவர், நடப்பார், பின்னே செல்பவர் "பொலியோ! பொலியோ" என்று பின் பாட்டாக சொல்லி செல்வார். கையில் உள்ள பொங்கல் சோற்றை நிலத்தில் இடுவர். இது போன்று மும்முறை கால் நடைகளை வலம் வருவார்கள். பின் குடும்பத் தலைவன் குனிந்து படையலுக்கு முன்பாக இருக்கும் சாணி குளத்திளிருக்கும் கோமியத்தை நமக்கு உழைத்து உணவு எனும் அமிழ்தும் அளிக்கும் மாட்டை போற்றும் விதமாக வாய் வைத்து உறிஞ்சிக் குடிப்பான். பின் பொங்கல் சோறுண்டைகளை மாடுகளுக்கு கடினப்பட்டு வாயை திறந்து ஊட்டுவார்கள்.

நம் வாயிக்கு சோறளித்த மாடுகளுக்கு நன்றியாக தன் மாடுகளுக்கு சோறு ஊட்டுவான் என்பதே மாட்டுப் பொங்கலாகும். பின் உறவினர்களுக்கு மாட்டுப் பொங்கல் சோற்றை வழங்கி மகிழ்வான். இவைகள் முடிந்து ஊர்களின் பொது மண்டு என்ற மரபு காலந்தொட்டு வரும் இடங்களுக்கு மாலை 6 மணியளவில் மாடுகளை இழுத்துச் சென்று ஊரார் மாடுகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தப்பட்டு பொதுப் பூசை செய்யப்பட்டு பின் மாடுகளை தம் இருப்பிடங்களுக்கு செல்லட்டமாக துள்ளி துள்ளி ஒட்டிக்கொண்டு மாடுகளோடு ஓடிச் செல்வார்கள். பொது மண்டில் மாடுகளை ஓட்டும் போது வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் மாடுகள் ஓடிச் சென்றவுடன் அங்கேயும் வழியிலேயும் மாடுகள் போட்டிருக்கும் மாட்டுச் சாணிகளை எடுத்து வந்து தாங்கள் இல்லங்களின் முன் வாயிலில் திஸ்டியும் பூதனங்களும் பேய்களும் வீட்டிற்கு வராமல் காக்கும் பொருட்டு சாணியால் சுவற்றில் ராகாசி என்னும் உருவத்தை எழுதி வைப்பார்கள். தகடூர் நாட்டு மக்களின் ஒரு சாரர் பெரும் பொங்கல் பெரும் பானை வைத்து கொண்டாடுவதும் மற்றொரு சாரார் மாட்டுப்பொங்கல் மாட்டுப்பானை வைத்து கொண்டாடுவதையும் இன்னும் சிலர் பெரும் பானையும் மாட்டுப் பானையும் இரண்டுமே வைத்துக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்ததக்கது.

தகடூர் நாட்டில் பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே ஊர்களில் கரிநாளில் கூளியாடவும், கோல் போடவும் திட்டமிடுவார்கள். கோல் என்பது சிலம்பு பயிற்சியாகும். ஊர்களில் அடலேறு இளைஞர்கள் இளம் மூங்கில் கோல்களை சந்தையில் வாங்கி வந்து தக்க பரம்பரை பரம்பரையாக கோல் பயிற்சி கலையின் விற்பன்னர்களான கோல் வாத்தியார்களை கொண்டு இரவில் சிலம்பு பயிற்சி பெறுவார்கள். தகடூர் நகரம் தமிழகத்திலேயே தலை சிறந்த சிலம்பு பயிற்சி வீரர்களை கொண்ட நகரமாகும். இது சங்க காலம் தொட்டே வருகிறது. உலக கராத்தே தமிழ்மணி என்பவர் தர்மபுரியிலும் தஞ்சாவூரிலும் சிலம்பு பயின்றே ஜப்பான் சென்று கராத்தே வீரர் ஆனார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

வருடா வருடம் கரிநாள் அன்று வன்னியர்களின் சிலம்பாட்டம் நடைபெறும். 

கூளி ஆட்டம்:- 


பொங்கல் நான்காம் நாள் தகடூர் நாட்டில் கரிநாள் கொண்டாட்டம் என்பது கூளி(எருது) ஆட்டமாகும். தகடூர் என்பது இன்றைய அளே தருமபுரி ஆகும். தகடூர் கோட்டை என்பது இன்றைய அதியமான் கோட்டை ஊராகும். தகடூர் நாட்டில் கூளி ஆட்டம் என்பது மாபெரும் சிறப்பாகும். விருபாட்சிபுரம் ஆக்ரகாரத்  தெரு என்னும் ஊரின் தனித் தமிழ் பெயர் காலப்போக்கில் மறைந்தன. இவ்வூர் 12 ஊர் நாட்டானை கொண்டதாகும். இவ்வூரில் தென்புறம் நவடப் பள்ளிகளும் வடபுறம் ஓலைப் பள்ளிகளும் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையில் நவடப் பள்ளிகள் சார்பில் ஒரு கூளி ஆட்டமும் ஒலைப்பள்ளிகள் சார்பில் ஒரு கூளியாட்டமும் நடைபெறும். இதன் தலைமையான நாட்டான் கொட்டாயிலிருந்து ஒரு கூளி ஆட்டமும் தருமபுரி நகர கடைவீதிகளில் ஆடி வந்து சாலை விநாயகர் கோவில் வீதியில் குன் செட்டி குலம் பொது மண்டில் கூளி மாடுகளை இழுத்து வந்து கூளியாடி விளையாட்டு வேடிக்கை காட்டி மூன்று சுற்று மண்டில் சுற்றி விட்டு வெளியே வந்து கடை வீதி வழியாக ஊர் வந்தடையும்.



பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கூளி ஆட்டம். 

இக்கூளி மண்டில் யார் முதலில் நுழையும் மரபு உரிமையை பெறுவது என்பதில் ஊர் மக்கள் போரிட்டது என்றும் இறுதியில் போரில் தீர்ப்பாக விருபாட்சிபுரம் அக்ரகாரத் தெருவே முதண்மையாக நுழையும் உரிமை மரபு பெற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த மண்டில் முதலாக நாட்டான் கூளி முதலாகவும் அடுத்து ஊர் கவுண்டர் கூளி அடுத்து பொது மக்களின் கூளி விடப்படும்.


வேலம்பட்டி கூளி ஆட்டம். 
சோழர்கள் ஆட்சிதாக்கமும், போசாளர்  ஆட்சிதாக்கமும், விஜயநகர மன்னர்கள் ஆட்சிதாக்கமும் விருபாட்சிபுரமே தலைமை இடமாக கொண்டிருந்தது. மேலும் இந்த ஊர் வன்னிய ஊர் கவுண்டர் வீடு அரசன் வீடு என்பது போல் "இராயம் வீடு" என்று மரபு ரீதியாக அழைக்கப்படுகிறது.

விருபாட்சி புரம் இன்று மூன்று ஊராக பிரிந்து இருக்கிறது.

குப்பாக்கவுண்டர் தெரு
பள்ளித் தெரு
காமாட்சியம்மன் தெரு. 

சத்திரம் மேல் தெரு, நாட்டான் கொட்டாய், நாட்டான் (எ) அண்ணாமலைக் கவுண்டர் தெரு, ஜெட்டிப்பட்டி மொன்னையன் கொட்டாய், குப்பா கவுண்டர் தெரு, காமாட்சியம்மன் தெரு, பள்ளித் தெரு இவை அனைத்தும் வன்னிய கவுண்டர்கள் ஊர். இவர்கள் அனைவரும் தனித் தனியே பொலி எருதின் கழுத்தில் வடக்கயிறு விட்டு இருப்பக்கமும் வன்னிய அடலேறு இளைஞர்கள் பிடித்துக்கொண்டு எருதின் முகத்தின் முன் பாகத்தில் சிறு கோவில் சிவப்பு துணிக்கட்டி அதை பாய்ச்சல் எருதின் மீது வைக்க, அது மிரண்டோடி பாய பாய பறை மேளம் தட்ட இளைஞர்கள் இங்கு மங்கும் ஓடி யோடி ஓடியோடி எக்கலித்துச் சிரித்து குதித்தும் ஆடியும் ஓ! ஓ! என்றும் சீழ்கை அடித்தும் கொக்கரித்தும் தம் ஆண்மைத் திறத்தோடு அந்தந்த கூட்டம் கூட்டமாக ஆடி வருவார்கள்.

இவ்விழாவை தவிர மாரியம்மன், வேடியப்பன், அய்யனார் போன்ற திருவிழாக்கள் நடைபெறுகிறது.

வலசை போதல்:- 


வலசை போதல் என்பது மழை வேண்டி கிராமத்தை காலி செய்துவிட்டு ஊருக்கு வெளியே ஆற்றங்கரையின் ஓரமாகவோ அல்லது மலையின் மீதோ குடும்பத்துடன் சென்று வருட பகவானை வேண்டி மழை வேண்டி வணங்குவர். பொங்கல் வைப்பது, கிடா வெட்டி பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டடுவார்கள். இந்த திருவிழாவை கிருஷணகிரி மாவட்ட வன்னிய கவுண்டர்கள் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

காவேரிபட்டினம் அருகே சந்தாபுரம், குட்டூர், மலையாண்ட அள்ளி, சவூளூர் மற்றும் தளிப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னியர்கள் ஆடி மாதம் மழை தவறிய காலத்தில் தொடைப்பம், பாய், பொங்கல் வைக்க தேவையான சாமான்கள் மற்றும் ஆடு வெட்டி கொண்டடுவார்கள். காலை 7-க்கு சென்று மாலை தான் வீடு திரும்புவார்கள். 




நெடுங்கல் பயணியர் விடுதி அருகில் பாரூர் ஏரிக்கு தண்ணீர் பிரித்து அனுப்பும் செக் டேமுக்கு அருகில் வலசை போதல் மக்கள்.

கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்து விட்டு தென்னந்தோப்பில் பொதுமக்கள் குடியேறினர். அங்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி அருகே உள்ளது கள்ளகுறுக்கி கிராமம். இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுவரும் இக்கிராம மக்கள் மழை வேண்டியும், இந்த ஆண்டு பருவமழை தாமதமின்றி உரிய காலத்தில் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் வலசை போதல் அல்லது வனபோஜனம் என்று அழைக்கப்படும் நூதன வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இக்கிராமத்தில் உள்ள அனைவரும் நேற்று ஊரை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும், மாந்தோப்புகளிலும் குடியேறினார்கள். அவர்கள் தங்களது ஆடு-மாடுகளையும் உடன் அழைத்து சென்றனர். காவலுக்காக 2 இளைஞர்கள் மட்டும் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறினர்.



பின்னர் தோப்புகளில் கிடா வெட்டி பொங்கலிட்டு மழை வேண்டி சக்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கிடாய் விருந்து சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. மாலை வரை தோப்புகளிலே இருந்தனர். இருட்ட தொடங்கியதும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஊர் எல்லை யில் ஒரு ஆட்டை பலியிட்டு வழிபட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

ஆதாரம்: http://m.tamilkurinji.in/news_details.php?id=24330&categ=1


காவேரிப்பட்டணம் அருகே மழை வேண்டி, ஊரை காலி செய்து காட்டுப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் அங்கு ஒப்பாரி வைத்து வினோத வழிபாடு நடத் தினர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழை வேண்டி, ஊரை காலி செய்து அருகில் உள்ள வனப் பகுதிகளில் தஞ்சமடைந்து வழிபாடு நடத்துவது வழக்க மாகும். இதற்கு ‘வலசை போதல்’ என்று கூறுவார்கள். முன்னோர்கள் கடைபிடித்து வந்த இந்த வழிபாடு முறையை, தற்போதும் பல கிராமங்களில் கடைபிடித்து வருகிறார்கள்.

அந்தவகையில் காவேரிப்பட் டணம் அருகே உள்ள கரடி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தேவர்முக்குளம் கிராம மக்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ‘வலசை போதல்’ வழி பாடு நடத்தினர்.


கிராமத்தை காலிசெய்த மக்கள்:-


தேவர்முக்குளம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே ஊரை காலி செய்து அனை வரும் வெளியேறினர். குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் வீடு களை பூட்டிவிட்டு, ஊருக்கு வெளியே சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரங்க நாதர் கோவிலுக்கு சென்றனர். தாங்கள் வளர்த்து வரும் ஆடு-மாடுகளையும் உடன் அழைத்துச் சென்றனர். இத னால் தேவர்முக்குளம் கிராமம் வெறிச்சோடி காணப்பட்டது. கிராமத்திற் குள் அந்நியர்கள் யாரும் சென்று விடாமல் இருக்க, கிராமத்தின் நுழைவு பாதை யின் குறுக்கே கம்பு கட்டி யிருந்தனர். மேலும் 2 வாலிபர் கள் மட்டும் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.



ஒப்பாரி வைத்து வழிபாடு:-


ரங்கநாதர் கோவிலில் கூடிய கிராம மக்கள் அனைவரும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தங்கள் கிராமத்தில் வறுமை நீங்கி வளம்பெருக வேண்டியும் அருகில் உள்ள காலி இடத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தோப்புகளில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்து அனைவரும் ஒன்றாக சமை யல் செய்து சாப்பிட்டனர். தொடர்ந்து மாலையில் சூரி யன் மறைந்ததும் தங்கள் வீடு களுக்கு புறப்பட்டு சென் றனர்.


ஒப்பாரி வைத்து வழிபாடு


ஆதாரம்: http://www.dailythanthi.com/News/Districts/2014/08/17232253/Pray-for-rain-Territory-vacatedKeep-lamenting-Requiem.vpf

http://202.191.144.180/Missing%20Season%20Heavier%20Rain%20In%20drought%20Stuck%20to%20elp%20Krishnagiri%20District

*******************************************************************************************************

இதோடு அல்லாமல் இன்னும் சில பழக்க வழக்கங்கள் தகடூர் நாட்டிற்கு மட்டுமே உள்ளது அதைப்பற்றியும் ஒவ்வொன்றாக பாப்போம். தகடூர் நாட்டின் பழக்க வழக்கங்கள் தமிழகத்திலேயே எங்குமில்லாத பழக்க வழக்கங்கள் ஆகும். இதுவே தொன்மையானதும் கூட.

**************************************************XXXXX*****************************************

2 comments: